இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் ஓளடத மரங்களை (மூலிகை மரங்கள்) பயிரிடுதல் திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் தலைமையில் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி மரக்கன்றுகளை விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.அதாஉல்லாவிடம் இம்மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
அந்த வகையில் – பொத்துவில், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை மற்றும் இறக்காமம், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், அக்கரைப்பற்று, ஆலங்குளம் ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஆகியவற்றுக்கான மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல். அப்துல் ஹை குறித்த மரக்கன்றுகளை நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றார்.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத்துறையின் ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஜெ.பாஸ்கரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஷகீலா இஸ்ஸடீன் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக மாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் ஓளடத மரக்கன்றுகள் பயிரிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
றிசாத் ஏ காதர் (ஒலுவில் மத்திய விசேட நிருபர் )