கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பியோடிய 14 கைதிகளை எதிர்வரும் பெப்ரவரி (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலனறுவை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, வெலிக்கந்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 14 கைதிகள் பொலன்னறுவை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர். இவர்களை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஜிஸ்திரேட் நீதவான் ஜி.பி.டி. சந்தரேகா உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி மோதல்களின் போது காயமடைந்துள்ள 10 பேர் மற்றும் மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தலையீடுசெய்த இரணுவ வீரரொருவரும் வெலிக்கந்தை மற்றும் பொலன்னறுவை அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பியோடி சோமாவதி புனித பிரதேசத்திற்கு அருகில் சுற்றுலா விடுதியொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் வண்டியொன்றை கொள்ளையிடுவதற்கு முயற்சித்தமை மற்றும் பாதுகாப்பு அதிகாரிக்கு கத்தியினால் தாக்குதல்களை மேற்கொண்டு காயங்களை ஏற்படுத்தி அவரிடமுள்ள 5,000 ரூபாவையும் கையடக்கத் தொலைபேசியையும் அபகரித்துள்ளமை தொடர்பில் 21 கைதிகள் புலஸ்திபுர பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை பொலன்னறுவை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலஸைார் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்