Home » சபஹர் துறைமுகம், INSTC திட்டங்கள் மூலம் வலுவடையும் இந்தியா- ஈரான் உறவு

சபஹர் துறைமுகம், INSTC திட்டங்கள் மூலம் வலுவடையும் இந்தியா- ஈரான் உறவு

- எஸ். ஜெய்சங்கரின் தெஹ்ரான் விஜயம் மூலோபாய ஒத்துழைப்பு மற்றும் தெற்காசியாவில் ஐரோப்பாவிற்கு மேம்படுத்தப்பட்ட பண்டப் பாதைகளுக்கு வழி வகுக்கிறது

by Rizwan Segu Mohideen
January 30, 2024 8:15 pm 0 comment

இந்த மாத ஆரம்பத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர், தனது ஈரான் விஜயத்தின் போது வீதி மற்றும் நகர அபிவிருத்தித்துறை அமைச்சருடன், கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஈரானின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள மூலோபாய சபாஹர் துறைமுகத்திற்கான “நீண்ட கால ஒத்துழைப்பு கட்டமைப்பை” நிறுவுவதே அவர்களின் சந்திப்பின் பிரதான நோக்கமாக இருந்தது.

ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் பற்றி கருத்துப் பகிர்ந்துகொண்ட ஜெய்சங்கர், வீதிகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரை சந்திப்பதன் மூலம் தெஹ்ரானில் எனது பேச்சுவார்த்தைகளை தொடங்கினேன். சபாஹர் துறைமுகம் தொடர்பாக நீண்டகால ஒத்துழைப்பு கட்டமைப்பை நிறுவுவது பற்றிய விரிவான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து தாழ்வாரம் (INSTC) குறித்தும் ஆராயப்பட்டது.

INSTC இன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், இது கப்பல், ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்தை உள்ளடக்கிய ஒரு விரிவான பாதையாக இருக்கும்.இது தெற்காசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு மத்திய ஆசியா மற்றும் ரஷ்யா வழியாக பண்டப் போக்குவரத்தை எளிதாக்கும். இந்தப் பாதையானது முதன்மையாக இந்தியாவிலிருந்து ஈரானுக்கு பண்டங்களை அனுப்புவதை நோக்காகக் கொண்டிருக்கும். மேலும் அங்கிருந்து கெஸ்பியன் கடல் வழியாக கப்பல் மூலம் அல்லது டிரக் அல்லது ரயில் மூலம் தெற்கு ரஷ்யாவிற்கு பண்டங்கள் எடுத்துச் செல்லப்படும். பின்னர், பொருட்கள் டிரக் அல்லது ரயில் மூலம் வோல்கா ஆற்றின் வழியாக மொஸ்கோ வழியாக வடக்கு ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படும்.

2001 இல், ரஷ்யா, ஈரான் மற்றும் இந்தியா ஆகியவை INSTC வழியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளுடனும், பல்கேரியா உள்ளிட்ட மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளுடனும், இத்திட்டத்தை ஊக்குவிக்கவும், வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது. இந்தத் திட்டம் அஸர்பைஜான், ஆர்மீனியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், துருக்கி, உக்ரைன், பெலாரஸ் மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகள் உள்ளிட்ட பரந்த நாடுகளின் கூட்டமைப்பை உள்ளடக்கியது.

2022 ஜூலை மாதத்தில் INSTC மூலம் முதல் வணிகப் பண்டங்களைக் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இது இந்த மூலோபாய போக்குவரத்து வழித்தடத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது.

INSTC என்பது இந்தியாவின் ஜரோப்பிய- ஆசிய நுழைவாயில்

சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்துத் தாழ்வாரம் (INSTC), யூரேசியாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் நுழைவாயிலாகப் போற்றப்படுகிறது.இது இந்தியப் பெருங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை ஈரான் வழியாக கெஸ்பியன் கடலுடன் இணைக்கும் பல்துறை போக்குவரத்து பாதையாகும். இந்த இலட்சியத் திட்டம் இந்தியாவின் மும்பையிலிருந்து ஈரானின் பந்தர் அப்பாஸுக்கு கடல் வழியாக பண்டங்களை தடையின்றி பரிமாற்றுவதைக் குறிக்கிறது. பந்தர் அப்பாஸிலிருந்து, கெஸ்பியன் கடலில் உள்ள ஈரானிய துறைமுகமான பந்தர்-ஈ அன்சாலிக்கு பாதை வழியாக பயணம் தொடர்கிறது. பின்னர், இந்த பாதை கப்பலில் கெஸ்பியன் கடலைக் கடந்து ரஷ்ய துறைமுக நகரமான அஸ்ட்ராகானை அடைகிறது, மேலும் அங்கிருந்து, ரஷ்ய கூட்டமைப்பின் பல்வேறு பகுதிகளுக்கும், ரஷ்ய ரயில்வே துறையின் விரிவான வலையமைப்பின் வழியாக ஐரோப்பாவிற்கும் நீண்டு செல்கிறது.

உறுப்பு நாடுகளிடையே ஒரு விரிவான போக்குவரத்து வலையமைப்பை நிறுவுவதையும், நிலத்தால் மூடப்பட்ட மத்திய ஆசிய குடியரசுகளுடன் இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ள INSTC செப்டம்பர் 2000 இல் ரஷ்யா, ஈரான் மற்றும் இந்தியாவால் தொடங்கப்பட்டது . காலப்போக்கில் இத்திட்டம், ஆர்மீனியா, அசர்பைஜான், கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி, உக்ரைன், பெலாரஸ், ஓமன், சிரியா மற்றும் பல்கேரியா உள்ளிட்ட பதினொரு நாடுகளின் ஆதரவைப் பெற்றது.

ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் வழியாக ரஷ்யாவிற்கும், பொதுநலவாய சுதந்திர நாடுகளுக்கு (CIS) போக்குவரத்தின் போது மிகவும் உகந்த பாதையாக INSTC பாதை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு போக்குவரத்தின் போது சாதகமானதாக இருக்கும். ஒரு சட்ட கட்டமைப்பாக செயல்படும் INSTC , இந்தியா, ஈரான், ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் கப்பல்-ரயில்-வீதி வழியாக பண்டப் போக்குவரத்தை எளிதாக்குகிறது. அதன் பொருளாதார தாக்கத்திற்கு அப்பால், INSTC யூரேசிய நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கிறது. அண்டை நாடுகளுக்குச் செல்வதில் ஒரு முக்கிய அங்கமாக அமையும் INSTC இணைப்புத் திட்டம் பிராந்தியத்துடன் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்திற்கு கூடுதல் பங்காற்றும்.

இந்தியாவின் மூலோபாய பார்வையில் சபாஹர் துறைமுகத்தை சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து தாழ்வாரத்தில் (INSTC) ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக மாற்றுவதும், பொதுநலவாய சுதந்திர (CIS) நாடுகளை சென்றடைய ஒரு முக்கிய இணைப்பை வழங்குகிறது.

தற்போது, இந்திய பொருட்களை எடுத்துச் செல்லும் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக ரஷ்யா மற்றும் மத்திய ஆசியாவை அடைவதற்கு நீண்ட பயணத்தை எதிர்கொள்கின்றன. இது சுமாராக 45-60 நாட்கள் ஆகும். இதற்கு நேர்மாறாக, புதிய பாதையானது போக்குவரத்து நேரத்தை சுமார் 25-30 நாட்களுக்கு கணிசமாகக் குறைக்கிறது. இந்த நடைபாதை வர்த்தகத்தை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல், இந்தியா, ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஏனைய பகுதிகளிலும் பரந்த சந்தை வாய்ப்புக்களை திறக்கிறது. வளர்ந்து வரும் புவிசார் அரசியல் நிலப்பரப்பில் ஒரு முக்கிய பங்கை வகிக்க தயாராக உள்ள இந்தத் திட்டம் உலகளாவிய சக்தி இயக்கவியலில் ஒரு மாற்றத்தை எடுத்துக் காட்டுகிறது.

இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்கள் இல்லாததன் விளைவாக எல்லைகளில் உள்ள தடைகளை கடந்து, வர்த்தக வழிகளுக்கான இருதரப்பு உள்கட்டமைப்பின் விரிவான வலையமைப்பை நிறுவுவதற்கு INSTC பங்களிக்கிறது. ஹெல்சிங்கியில் இருந்து பந்தர் அப்பாஸ் வரையிலான கடல் பாதை சுமார் 7,217 கடல் மைல்கள் (13,366 கிமீ) தொலைவில் உள்ளது, இந்த தூரத்தை புதிய திட்டம் பாதியாக குறைப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிராந்திய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பையும் இணைப்பையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிராந்தியத்திற்குள் பாதைகளின் வலையமைப்பை விரிவுபடுத்துவதில் யூரேசியா நாடுகள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன. இன்றைய புவிசார் அரசியல் நிலப்பரப்பில், சிறந்த இணைப்பு மற்றும் வலுவான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வளர்ப்பது மிக முக்கியமானதாகும். வடக்கு-தெற்கு நடைபாதை ஒரு உந்துசக்தியாக வெளிப்படுவதோடு பிராந்திய சக்திகளை ஒன்றிணைப்பதோடு பரஸ்பர புரிதலை வளர்க்கிறது .அத்தோடு பல முனைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் செய்யத் இப்ராஹிம் ரைசியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்தியாவின் பரந்த இணைப்பு முன்முயற்சிகளின் முக்கிய அங்கமான, இணைப்பு மையமாக, சபாஹர் துறைமுகத்தின் முழு திறனையும் உணர்ந்து கொள்வதில் தலைவர்கள் தங்கள் அர்ப்பணிப்பை வலியுறுத்தினர். ஈரானில் அமைந்துள்ள சபாஹர் துறைமுகம், இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கு இடையே நெறிப்படுத்தப்பட்ட வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய பாதையாக செயல்படுகிறது.

இந்த வழித்தடத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது இந்தியாவை ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் இணைக்கும் ஒரு முக்கிய இணைப்பை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. சபாஹர் துறைமுகத்தை பிராந்தியத்திற்கான வணிக போக்குவரத்து மையமாக அங்கீகரிப்பது, குறிப்பாக மத்திய ஆசியா, பிராந்திய வர்த்தகத்தை எளிதாக்குவதில் அதன் மூலோபாய முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனை சந்தித்து இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறுவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்கள்.

தெஹ்ரானில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கலந்துரையாடல் நடத்தினார். காஸா நிலைமை மற்றும் செங்கடல் மற்றும் அரேபிய கடலின் சில பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் போன்ற அழுத்தமான விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். இந்தியக் கடற்கரைக்கு அருகாமையில் நடந்த சம்பவங்கள் உட்பட, பிராந்தியத்தில் கடல் போக்குவரத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கவலை வெளியிட்டார். கடல்சார் துறையில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா மற்றும் ஈரானின் உறுதிப்பாட்டை இந்தப் பேச்சுவார்த்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.

– ஷபா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT