புதிய காத்தான்குடி தினகரன், மட்டக்களப்பு விசேட, கல்லடி குறூப், பெரிய போரதீவு தினகரன் நிருபர்கள்
மகாத்மா காந்திஜியின் 76ஆவது சிரார்த்த தினம் நேற்று செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, அதன் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
காந்தி சேவா சங்கச் செயலாளர் கதிர் பாரதிதாசன் உட்பட அதன் உறுப்பினர்கள் மற்றும் சென். ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் நிறுவனத்தின் மாவட்டத் தலைவர் மீரா சாய்பு அஹமட் லெவ்வை உட்பட அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டு, மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், மரியாதை செலுத்தினர். இதன்போது, மகாத்மா காந்தி தொடர்பாக மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் விசேட உரை நிகழ்த்தினார்.