Friday, March 29, 2024
Home » அதிகரித்த வேகத்தினால் தினமும் பரிதாப மரணங்கள்!

அதிகரித்த வேகத்தினால் தினமும் பரிதாப மரணங்கள்!

by damith
January 30, 2024 6:00 am 0 comment

நாட்டில் வாகனப் போக்குவரத்து விபத்துக்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. இவ்விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருந்த போதிலும் விபத்துக்கள் குறிப்பிடத்தக்களவில் குறைந்தபாடிலில்லை.

நாட்டில் அண்மையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கும் அவர் பயணித்த வாகனம் அதிக வேகத்தில் செலுத்தப்பட்டதே காரணம் என பொலிஸ் விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

அதேபோன்று அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பெண்மணி உயிரிழக்கவும், 8 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகவும் அதிக வேகத்தில் பஸ் வண்டியை செலுத்தியமையே காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது எட்டு மாடுகளும் கூட கொல்லப்பட்டன.

இதேவேளை நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறுகின்ற விபத்துக்களிலும் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறு நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பதிவாகும் வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்களுக்கு அதிகரித்த வேகமே மூலகாரணமாக அமைந்திருக்கின்றது.

அந்த வகையில், சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் டொக்டர் சமிதா சிறிதுங்க குறிப்பிடுகையில், ‘நேரத்தை மீதப்படுத்துவதனைக் கருத்தில் கொண்டு அதிக வேகமாக வாகனம் செலுத்துவதால்தான் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களைச் செலுத்துவதே இந்த விபத்துக்களுக்குக் காரணம்’ என்றுள்ளதோடு, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்கள் ஒப்பீட்டளவில் அதிகரித்திருப்பதனை எம்மால் அவதானிக்க முடிகிறது. எனவே, அதிவேக வீதிகளில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

உண்மையில் பெரும்பாலான வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்களுக்கு அதிகரித்த வேகமே பங்களிக்கிறது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பதுதான் வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் கருத்தாகும். அதனால் வீதிப் போக்குவரத்து சட்டங்களை மதித்து செயற்படுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான பொறுப்பு சாரதிக்குரியதாகும். இவர்கள் அதிக வேகத்தில் வாகனங்களைச் செலுத்துவதால் தங்களது உயிருக்கு மாத்திரமல்லாமல், வாகனத்தில் பயணிக்கும் ஏனையவர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.

இந்த வகையில் நாளொன்றுக்கு 7, 8 வாகன விபத்து மரணங்கள் பதிவாகின்றன. இலங்கையில் இடம்பெறுகின்ற மரணங்களில் நான்கில் ஒரு பகுதி மரணங்கள் வீதி விபத்துக்கள் காரணமாகவே இடம்பெறுகின்றன என்று பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர். நாட்டில் நாளொன்றுக்கு பல்லாயிரம் மரணங்கள் பதிவாகின்றன. அவற்றில் நான்கிலொரு பகுதி மரணங்கள் வீதி வாகனப் போக்குவரத்து விபத்து மரணங்களாகும். ஒவ்வொரு மூன்று மணித்தியாலயத்திற்கும் 10 வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்ற அதேநேரம், அவற்றில் குறைந்தது ஒரு மரணமாவது நேருகின்றது. இந்த விபத்துகளுக்கு வீதிப் போக்குவரத்து சட்டங்களை மதிக்காமல் வாகனங்களை செலுத்துவதும் ஒரு முக்கிய காரணமாகும்.

இந்நிலையில்தான் வீதிப் போக்குவரத்து சட்டங்களை பொருட்படுத்தாது செயற்படும் சாரதிகளைக் கண்டுபிடித்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கவென சி.சி.ரி.வி கமெரா கட்டமைப்புக்ளைப் பயன்படுத்தும் முறைமையை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அதற்கான அபராத ஆவணம் சாரதியின் இல்லத்திற்கே அனுப்பி வைக்கப்படும். அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விதமான விபத்துக்களைக் குறைத்துக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் சில தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் இம்முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன.

சாரதிகளை வீதிப் போக்குவரத்து சட்டங்களை மதித்து செயற்படச் செய்து விபத்துக்களை குறைத்து கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வாறான ஏற்பாடுகள் உலகின் பல நாடுகளிலும் அமுலில் இருக்கின்றன. ஆனால் இந்நாட்டில் இவ்வேற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் சாரதிகள் மிகவும் பொறுப்புடனும் முன்னவதானத்துடனும் வாகனங்களைச் செலுத்தும் போது வாகன விபத்துக்களைப் பெரிதும் குறைத்துக் கொள்ளலாம். அதுவே அனைத்துத் தரப்பினரதும் தேவையும் எதிர்பார்ப்பும் ஆகும். அதற்கு ஏற்ப செயற்படுவது வாகன சாரதிகளின் பொறுப்பு ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT