தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி ரூபா மதிப்பிலான பீடி இலைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வலி நிவாரணி மாத்திரைகளை தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். இவற்றின் இலங்கை பெறுமதி 3,86,40,781 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,கண்காணிப்புக்கள் பலப்படுத்தப் பட்டன.இதன்போது,சிலுவைப்பட்டியிலிருந்து கடற்கரை செல்லும் சாலையில் சந்தேகிக்கும் வகையில் வந்த ஒரு மினி லொறியை காவல் துறையினர் சோதனையிட்டனர். இதில் தலா 35 கிலோ எடையுள்ள 76 மூடைகளில் 2,660 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், மோட்டார் சைக்கிளில் பண்டல்களுடன் வந்த நபரையும் பொலிஸார் மடக்கிப்பிடித்தனர். மோட்டார் சைக்கிளை பொலிஸார் சோதனையிட்டவேளை , சுமார் 57 ஆயிரம் ப்ரீகேப் 150 மி.கி. ( Pregab 150 Mg ) என்ற வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்,கடற்கரை பகுதியில் ஒரு டாரஸ் லொறி மற்றும் 03 மோட்டார் சைக்கிள்களில் தலா 35 கிலோ எடை கொண்ட 76 மூடைகளில் பீடி இலைகள் இருந்தன. இலங்கையில் இதன் மொத்த மதிப்பு (இந்திய பெறுமதி) 50 இலட்சம் ரூபா என்று கூறப்படுகிறது.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது