விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட இரண்டு இடைக்கால குழுக்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதற்கான அதிவிசேட வர்த்தமானியை நேற்று வெளியிட்டார்.
இந்த வர்த்தமானிக்கிணங்க சட்டபூர்வமான பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர், மீண்டும் தேர்தலை நடத்தும் வரை அந்த சங்கங்களின் முன்னைய நிர்வாக சபைக்கு இதன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுப் பிரிவு என்பவற்றுக்கு நியமிக்கப்பட்ட இரண்டு இடைக்கால குழுக்களே இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சரினால் கலைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 1973 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க, விளையாட்டுத்துறை மற்றும் விளையாட்டுத்துறை நியதிகளுக்கு அமைய, இந்த அதிகாரங்கள் அமைச்சருக்கு மீள வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.