Friday, March 29, 2024
Home » எதிர்காலத்திலும் இந்திய உதவி தொடருமென்று நம்புகிறோம்

எதிர்காலத்திலும் இந்திய உதவி தொடருமென்று நம்புகிறோம்

குடியரசுதின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

by mahesh
January 27, 2024 1:34 pm 0 comment

அனைத்து வழிகளிலும் உதவி வரும் இந்தியாவின் உதவிகள் எதிர்காலத்திலும் தொடருமென்று உறுதியாக நம்புவதாக, இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்தியாவின் 75ஆவது குடியரசுதினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்த வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“ஒட்டுமொத்த உலகுக்குமே அஹிம்சையை போதித்த நாடு பாரத தேசமாகும். ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அந்த நாடு கருதப்படுகின்றது. இன்று உலகில் பலமான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இணைந்துள்ளது.

அது மட்டுமன்றி, தொழில்நுட்பத் துறையிலும் அந்த நாடு வேகமாக முன்னேறி வருகின்றது.

நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையுடன் இந்தியா இன்று குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் அனைத்து இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தியா எமது தொப்புள் கொடி உறவு. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் முந்தியடித்துக்கொண்டு, உதவி வழங்கிய நாடு அது என்பதை என்றுமே மறக்க முடியாது.

எமது மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இந்தியா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றது. அதனையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றேன்.

தெற்காசியப் பிராந்தியத்தின் காவலனாக விளங்கும் இந்தியா மென்மேலும் உயர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT