கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (26) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடவத்தைக்கும் கெரவலப்பிட்டிக்கும் இடையில் 27.01 மைல்கல் பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இந்த விபத்தில் 37 வயதுடைய ஒஸ்ட்ரிய
நாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் தாயார் உட்பட படுகாயமடைந்த மூவரும் இராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்த அதிசொகுசு வான், நிறுத்தி வைக்கப்பட்ட லொறியொன்றுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதுடன், ஹிக்கடுவை பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பயணித்த போதே இவர்கள் இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தை தொடர்ந்து வான் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பாக அத்துருகிரிய கட்டுப்பாட்டு நிலையப் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்