மருத்துவ சேவையின் எதிர்காலத்துக்காக அனைத்து மருத்துவ சங்கங்களும் இணைந்து புதிய திட்டமொன்றை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் (24) நடைபெற்றதாகவும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ நிறுவனம் உட்பட அனைத்துத் துறைகளின் மருத்துவர்களின் பங்களிப்புடன் இப்புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, இந்த நாட்டில் இலவச சுகாதார சேவையை எதிர்காலத்தில் நாடு சுமையாக உணராத வகையில் இந்த நாட்டு மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கக்கூடிய ஓர் அமைப்பு தொடர்பாக பேச வேண்டுமென்றார்.
மேலும், மக்களுக்கு அதிகளவான சேவைகளை எவ்வாறு வழங்க முடியுமெனக் கேள்வியெழுப்பிய அவர், மருந்துகளுக்கு செலவழிக்கும் பணத்துக்கு நியாயம் செய்வோம், குறைந்த செலவில் இந்த சேவையை வழங்குவோம். அதை எவ்வாறு செய்வதென்பது தொடர்பாக கலந்துரையாடியதாகவும், அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் இலவச சுகாதார சேவையை புதிய அத்தியாயத்துக்கு கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தை எட்டியதாகவும், மருத்துவர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.