இன்று (25) அதிகாலை 2.00 மணியளவில், இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.01 கிலோமீற்றர் மைல்கல் அருகில், கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் வண்டி ஒன்று, அதே திசையில் அதற்கு முன்னால் சென்ற கொள்கலன் வாகனத்துடன் மோதி, பின்னர் பாதுகாப்பு வேலியில் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த ஜீப் வண்டியில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது மெய்ப்பாதுகாவலர் பொலிஸ் கான்ஸ்டபிள் (72542) ஜயக்கொடி மற்றும் ஜீப் வண்டியின் சாரதி ஆகியோர் படுகாயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாகனத்தின் சாரதி ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.