இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்றுள்ள அமைதிக்கான ஆசிய பௌத்த மாநாட்டில் உலக அமைதி, மனிதாபிமானம் தொடர்பிலான புத்த பெருமானின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்திய உப ஜனாதிபதி ஜகதீப் தங்கர் அங்குரார்ப்பணம் செய்து வைத்த இம்மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றுள்ளது. இதன் போது உலக அமைதி, மனிதாபிமானம் தொடர்பில் புத்த பெருமானின் போதனைகள் குறித்து கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளன.
அமைதி மற்றும் உலகளாவிய மனிதாபிமானம் குறித்த புத்தபெருமானின் போதனைகளை மேம்படுத்துவதில் தங்களின் உறுதிப்பாட்டை இம்மாநாட்டில் பங்குபற்றிய பிரதிநிதிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அதேநேரம் மாநாட்டின் பொதுக்குழுவில் தீர்மானமங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மங்கோலியா, ரஷ்யா, நேபாளம், பங்களாதேசம், இலங்கை, ஜப்பான், கம்போடியா, லாவோஸ், தென் கொரியா, வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் அங்கத்தவர்கள் பங்குபற்றிய இம்மாநாட்டிற்கு பூட்டான், மியான்மர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து விஷேட பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
மங்கோலியாவின் காம்போ லாமா சமாகின் கோம்போஜோவின் வேண்டுகோளின் பேரில், இந்தியா, மங்கோலியா, ஜப்பான், மலேசியா, நேபாளம், வியட்நாம், இலங்கை, தென் கொரியா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி அமைதிக்கான ஆசிய பௌத்த மாநாடு 1969 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வமைப்பின் செல்வாக்கு மிக்க பணிகளை அங்கீகரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் அரச சாரா அமைப்பு என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.