சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசுகளை வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்கள், பிரதி பொலிஸ் மாஅதிபர்கள், பிராந்திய அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தகவல் வழங்குபவர்களின் இரகசியம் காக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
T-56, AK-47 உள்ளிட்ட தானியங்கி துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட அரை தானியங்கி ஆயுதங்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 2,50,000 ரூபா பரிசு வழங்கப்படவுள்ளது.
ரிவால்வர் ரக துப்பாக்கிகள் பற்றி தகவல் அளிப்பவருக்கு 1,50,000 ரூபா பரிசாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிப்பீட்டர் ரக துப்பாக்கி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 50,000 ரூபா சன்மானமும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து துப்பாக்கிக்கு 15,000 ரூபா சன்மானமும் வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கிகளுக்கு 15,000 ரூபா வழங்கப்படும்.
சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கைக்குண்டொன்றை மீட்டெடுப்பதற்கு 25,000 ரூபாவும், சந்தேகத்திற்கு இடமின்றி அதனை மீட்பதற்கு 15,000 ரூபாயும் வழங்கப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை மீட்டெடுப்பது குறித்த தகவல்களுக்கு 15,000 ரூபா வெகுமதியாக வழங்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.