யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு ‘இலங்கையில் தொடரும் நெருக்கீடுகளிடையே தப்பிப்பிழைத்தலும் எதிர்ப்பும்’ எனும் கருப்பொருளில் கைலாசபதி கலை அரங்கில் இன்று வியாழக்கிழமை (18) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.
மாநாட்டின் அழைப்பாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எல்.ரமணன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்துகொள்கிறார்.
யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டின் தொடக்க நிகழ்வுகளில் ஒன்றாகவும் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டு தொடரின் ஓர் அம்சமாகவும் இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு நடைபெறுவதுடன், மாணவர்கள் தமது இறுதி வருட ஆய்வு செயற்பாட்டின் பேறாண ஆய்வேடுகளை அடிப்படையாக கொண்டு தயாரித்த ஆய்வுக்கட்டுரைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக இம்மாநாடு அமைந்துள்ளது.
மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இம்மாநாட்டில் கலைப்பீடத்தின் சமூக, விஞ்ஞானம் மற்றும் மனிதாயக் கற்கைகள் சார்ந்த 136 ஆய்வுக் கட்டுரைகளை பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறும் மாணவர்கள் சமர்ப்பிக்கவுள்ளனர்.
ஆய்வுக்கட்டுரை அமர்வு இரண்டு தொகுதிகளாக 17 விடயதானங்களினூடாக முற்பகல் 11.00 மணிக்கும் மதியம் 1.00 மணிக்கும் பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரை மண்டபங்களில் நடைபெறும். இம்மாநாட்டில் தலைமையாளராக பேராசிரியர் சி.ரகுராம், கலைப்பீடாதிபதி மற்றும் சிறப்புரையாளராக இரேனியஸ் செல்வின், ஓய்வுநிலை இலங்கை நிர்வாகசேவை சிரேஷ்ட அதிகாரி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.