Friday, March 29, 2024
Home » பலஸ்தீன அரசுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி

பலஸ்தீன அரசுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி

- பல்வேறு அரச தலைவர்கள், பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி சந்திப்பு

by Rizwan Segu Mohideen
January 21, 2024 6:54 pm 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பலஸ்தீன வெளிவிவகார மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான அமைச்சர் கலாநிதி ரியாட் மல்கிக்கும் (Dr. Riyad Malki) இடையிலான சந்திப்பொன்று இன்று (21) நடைபெற்றது.

உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (21) ஆரம்பமான “G77 மற்றும் சீனா” 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

காஸா பகுதியில் மோதல்களைத் தடுத்து சமாதானத்தை நிலைநாட்ட ஐ.நா செயலாளர் நாயகத்தின் வேலைத்திட்டத்திற்கு இலங்கை பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்த ஜனாதிபதி, 05 வருடங்களுக்குள் பலஸ்தீன அரசை ஸ்தாபிப்பதே இலங்கையின் முன்மொழிவாக இருக்கிறது எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதையும், சுயாதீனமானதும், சுதந்திரமானதுமான உரிமைகளைப் பறிக்க முடியாது என்ற விடயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இதேவேளை, மாநாட்டில் பங்கேற்ற அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மாலைதீவு உப ஜனாதிபதி ஹுசைன் மொஹமட் லத்தீப் (Hussain Mohamed Latheef) ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பும் இன்று காலை (21) இடம்பெற்றது.

அதனையடுத்து ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸுக்கும் (António Guterres) இடையிலான சந்திப்பொன்றும் இன்று (21) கம்பாலாவில் இடம்பெற்றது.

இதேவேளை, இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஸ்ரீ வி. முரளீதரனுக்கும் (Sri V. Muraleedharan) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

லாவோஸ் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் பொக்சேகை கைம்பினோன் (Phoxay Khaykhamphithoune) மற்றும் பிலிப்பைன்ஸின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத் திணைக்களத்தின் செயலாளர் இவன் ஜோன் உய் (Ivan John Uy) ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரையாடினர்.

இலங்கை – உகண்டா ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

  • சரிவிலிருந்து இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு உகண்டா ஜனாதிபதி பாராட்டு.

உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி (Yoweri Museveni) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிநேகபூர்வமான வரவேற்பளித்த உகண்டா ஜனாதிபதி, சிறிது நேரம் சுமூகமாக கலந்துரையாடிய பின்னர் இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.

தனது அழைப்பையேற்று வருகைத் தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்த உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி, சரிவடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தைப் பாராட்டியதோடு, அதற்காக நாட்டு மக்களின் பாராட்டும் கிட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் புதிய பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது தலைவர்கள் கலந்துரையாடியதோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கை, பொருளாதார ரீதியில் முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும், இலங்கை 2024 ஆம் ஆண்டின் புதிய அபிவிருத்தி இலக்குகளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருப்பதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

சரிவடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மிகக் கடினமானதாக அமைந்திருந்த வேளையில், அந்தப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கவேண்டும் என்பதே இலங்கையின் மத்தியஸ்த நிலைப்பாட்டைக் கொண்ட பலரின் நிலைப்பாடாக இருந்தென சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் குறுகிய கால திட்டங்களினால் இன்று இலங்கையின் பொருளாதாரம் நிலைத் தன்மையை அடைந்துள்ளதாகவும், அதனால் பலரும் அவரைப் பாராட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை – உகண்டாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய துறைகள் ஊடாக மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது தீர்க்கமாக பேசப்பட்டது.

காலநிலை அனர்த்தம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன,வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, உகண்டாவிற்கான இலங்கை தூதுவர் வீ.கனநாதன் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரும் இதன்போது கலந்துகொண்டனர்.

5 வருடங்களுக்குள் பலஸ்தீன அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT