கிழக்கு மாகாணத்தில் தற்போது தொடரும் மழையுடன் கூடிய காலநிலையால் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், அதிலும் பாம்புக் கடிக்கு இலக்காகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடரும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
ஆறுகள், குளங்களின் நீர்மட்டம் நிரம்பி வழிகிறது. காட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடிவருகின்றது. இதனால் பாம்பு, முதலை போன்ற விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வீடுகளுக்குள் உட்புகும் கொடிய நாகம், புடையன், காட்டுவீரியன், வளலை, சுருட்டை வளலை போன்ற பாம்புகளின் கடிக்கு இலக்காகும் சம்பவங்களும் காணப்படுகின்றன. பாம்புக்கடியால் மட்டக்களப்பு, கல்முனை, வெல்லாவெளி ஆகிய இடங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக விஷ ஜந்துகளின் நடமாட்டம் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொதுமக்களை வைத்தியசாலை வட்டாரங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
பாண்டிருப்பு தினகரன் நிருபர்