இந்திய இளையோர் அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தின் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டி தென்னாபிரிக்காவில் இன்று (18) ஆரம்பமாகிறது. இதனையொட்டி பிரடோரியாவில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
எனினும் 54 ஓட்டங்களை பெறுவதற்கு நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு மத்திய வரிசையில் தினுர களுபஹன 67 ஓட்டங்களை பெற்று கெளரவமான ஓட்டம் ஒன்றை பெற உதவினார்.
இதன்படி 50 ஓவர்கள் முடிவில் இலங்கை இளையோர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இந்திய இளையோர் அணியின் முதல் இரு விக்கெட்டுகளையும் 17 ஓட்டங்களுக்கு வீழ்த்த முடிந்தபோதும் 3ஆவது விக்கெட்டுக்கு மஹீஷ் கான் (51) மற்றும் அணித் தலைவர் உதாய் சஹரான் (50) 167 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
இதன்மூலம் இந்திய இளையோர்கள் 41.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 209 ஓட்டங்களை எட்டினர். இளையோர் உலகக் கிண்ண ஆரம்ப சுற்றில் சி குழுவில் ஆடும் இலங்கை அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) தனது முதல் போட்டியில் சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது.