இரத்மலானையில் உள்ள ஜேர்மன் ரயில்வே தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் ரயில்வே இணை அலகு (Simulater) கட்டடத்திற்கான அடிக்கல், நடும் நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியுடன் ரயில்வே வினைத்திறனை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ்,இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.இதற்கென, 45 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.
நாட்டின் ரயில்வே வரலாற்றில் முதல் தடவையாக 48 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இக்கட்டடத்தில், சகல வசதிகளுடன் எஸ், 14 இயந்திரத்தின் மாதிரியான இந்த அலகு, ரயில் பாதைகள் மற்றும் சிக்னல் அமைப்புகளுடன் நிறுவப்படவுள்ளது.
ஒரே நேரத்தில் எட்டு சாரதிகளுக்கும் ஒரு பயிற்றுவிப்பாளருக்கும் தேவையான வசதிகள் இங்கு அடங்கியுள்ளன. அதே வேளை ரயில்வே துறையின் தலைமைப் பொறியியலாளர் அலுவலகத்தின் புதிய வாகன சேவை மத்திய நிலையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
இங்கு பேசிய அமைச்சர்,”தற்போது, தொழில்நுட்பமும் அறிவும் நாம் நினைப்பதை விட மிக வேகமாக முன்னேறி வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்புக்கள் 66 வீதம் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இதன் பாதிப்பு 40% வீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலைகளின் அடிப்படையில் இளம் தலைமுறையினருக்கு எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிகளை வழங்காமல் இருப்பது நமது நாட்டை மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளும்.
ஆங்கிலேயர்களே ரயில்வே சேவையை இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், தற்போது, ரயில்வே சேவையில், நம்மை விட, இந்தியா அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது.