சிம்பாப்வேயுக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ரி20 போட்டியில் இன்று (18) களமிறங்கவுள்ளது.
ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது ரி20 போட்டியில் கடைசி ஓவர் வரை இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தபோதும், அஞ்சலோ மத்தியூஸ் வீசிய கடைசி ஓவரில் சிம்பாப்வேயுக்கு தேவையான 20 ஓவர்களும் பெறப்பட்டன.
இதனால் இந்த ரி20 தொடர் 1–1 என சமநிலை பெற்றிருக்கும் நிலையிலேயே இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் மூன்றாவது ரி20 போட்டி நடைபெற்றவுள்ளது. ரி20 சர்வதேச போட்டி ஒன்றில் சிம்பாப்வேயுக்கு எதிராக முதல் தோல்வியை சந்தித்த வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு இன்றைய தினத்தில் போராட வேண்டியுள்ளது. அஞ்சலோ மத்தியூஸ் கடந்த போட்டியின் கடைசி ஓவர் தவிர்த்து முதல் இரண்டு போட்டிகளிலும் சோபித்து வரும் நிலையில் இன்றைய தினம் அவரது ஆட்டம் தீர்க்கமானதாக அமையும். எனினும் இலங்கை ஆரம்ப வரிசை தடுமாற்றம் கண்டு வருகிறது.
குறிப்பாக குசல் பெரேரா கடந்த போட்டியில் டக் அவுட் ஆனதோடு பத்தும் நிசங்கவும் முதல் இரு போட்டிகளிலும் ஓட்டங்களை பெறத் தவறினார். அணியின் மத்திய வரிசை சிறப்பாக செயற்பட்டு வருகிறது. இலங்கை அணியின் பந்துவீச்சு வரிசையும் வலுவாக இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் அணியில் மாற்றங்கள் செய்ய வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
சிகந்தர் ராசா தலைமையிலான சிம்பாப்வே அணி இலங்கைக்கு தொடர்ந்து சவால் கொடுத்து வரும் நிலையில் அது தொடரை கைப்பற்ற கடுமையாகப் போராடும்.