ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அங்கம் வகிப்பதற்கு ரஷ்யா முழுமையான ஆதரவு அளிப்பதாக
இந்தியாவுக்கான ரஷ்யத் தூதுவர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள ரஷ்ய தூதுவர், இக்கவுன்சிலில் இந்தியா நிரந்தர அங்கம் வகிக்கும் போது அது ஒவ்வொரு விடயத்தின் போதும் நடுநிலையானதும் சுதந்திரமானதுமான அணுகுமுறையைக் கையாளும். கடந்த ஆண்டு ஜி20 மற்றும் சங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பவற்றுக்கு தலைமை வழங்கிய போது இதற்கு சிறந்த முன்னுதாரணங்களை இந்தியா வழங்கியுள்ளன என்றும் கூறியுள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்விவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய தூதுவர் அலிபோவ், பாதுகாப்பு சபைத் தலைவர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் இது தொடர்பில் கடந்த ஆண்டு ஏழு தடவைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளளன.
கொவிட் 19 பெருந்தொற்றுக்கு பின்னர் கடந்த ஆண்டு அரசுகளுக்கிடையேயான ஆணைக்குழுவின் பணிகளை நாம் மீண்டும் தொடங்கியுள்ளோம். ரஷ்யாவும் இந்தியாவும் தீவிர அரசியல் உரையாடல்களுடன் கூடிய உறுதியான இருதரப்பு உறவுகளைப் பேணி வருகின்றன.
அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அண்மையில் ரஷ்யாவுக்கு விஜயம் செய்ததோடு அங்கு வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மாத்திரமல்லாமல் ஜனாதிபதி விளாடிமிர் புடினையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளார். குறிப்பாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன் இந்தோ-பசிபிக் விவகாரம், காசா மீதான யுத்தம், உக்ரைன் மோதல்கள் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துப் பரிமாறல்களை அவர் மேற்கொண்டுள்ளார் என்றும் மேலும் கூறியுள்ளார்.