சிலாவத்தை பிரதேசத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்து இடம்பெற்றதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் வண்டியானது சிலாவத்தை சந்தியை அண்மித்த வேளையில், பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள், அப்பஸ் வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கள்ளப்பாடு பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
இ.போ.ச. பஸ் வண்டியும் மோட்டார் சைக்கிளும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஓமந்தை விசேட, மாங்குளம் குறூப் நிருபர்கள்