இறை பிரார்த்தனையுடன் வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் பகிர்ந்து கொள்கிறோம். தமிழ் மக்களின் அறுவடைப்பண்டிகை விழாவாக, உழவர் திருநாளாக, தைத்திருநாள் காணப்படுகிறது. சமய ரீதியாக நாம் பார்க்கும் போது எம்மிடம் இல்லாதது எதுவும் இல்லை. வாழ்வியலின் அடிப்படைகளாக சமயநெறி காணப்படுகிறது. அன்பினையும் பண்பினையும் நனி நன்றிகள் பகிர்ந்து கொள்ளும் பாங்கினையும் அறச்சிந்தனைகளுடன் தர்மத்தினை போதித்து நிற்கிறது. இவ்வகையில் தான் உழவர் பெருமக்கள் சூரிய பகவானுக்கும் தொடர்ந்து விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றிகள் பகிர்ந்து கொள்ளும் பாங்கினையும் உணர்த்துவதாக காணப்படுகிறது. எமது சங்க இலக்கியங்களான “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையிலும் “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையிலும் “”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூற்றிலும் “தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூற்றிலும் “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையிலும் குறிப்புகள் காணப்படுகின்றன.
இத்தருணத்தில் அனைத்து மக்களும் வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வளமும் நலமும் பலமும் பெற்று இன்பகரமாக வாழ அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்து மனமார்ந்த நிறைந்த நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
சிவாகமகலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள். தலைவர், சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள். செயலாளர் இந்துக் குருமார் அமைப்பு.