இலங்கையின் உல்லாசபுரியான பெந்தோட்டை பீச் ஹோட்டலில், சீனன்கோட்டை இரத்தினக்கல் ஆபரண வர்த்தக சங்கத்தின் (CGJTA) ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி இலங்கை மீதான உலகின் கவனத்தையும் நம்பிக்கையையும் ஈர்த்துள்ளதென தன்ஸானியா நாட்டின் தொழிலதிபர் ஸலீம் அல்மாஸ் தெரிவித்துள்ளார்.
மூன்று தினங்களாக நடைபெற்ற மேற்படி கண்காட்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முதல்நாள் அங்குரார்ப்பண நிகழ்வை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். இலங்கை ஒரு சிறந்த பாதுகாப்பானதொரு நாடு. இந்நாட்டில் பல வளங்கள் செறிந்து காணப்படுகின்றன. அதிலும் விசேடமாக இலங்கையில் கிடைக்கின்ற இரத்தினக்கற்கள் மிகவும் பெறுமதியும் அதிசிறப்புமிக்கதாகும். நானும் பல நாடுகளுக்கு சென்றிருக்கின்றேன். இருப்பினும் இலங்கையில் கிடைக்கின்ற மாணிக்கக்கற்களுக்கு உலகச்சந்தையில் பெறுமதி அதிகம். அதேபோல் நடைபெற்ற இக்கண்காட்சியில் ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா நாடுகளைச்சேர்ந்த தொழிலதிபர்களும் கலந்துகொண்டமை இந்நாட்டுக்கு கிடைத்த பெருவெற்றியாகும். அதேபோல் இதனை ஏற்பாடு செய்த சீனன்கோட்டை (CGJTA) சங்கத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அல்மாஸ் தெரிவித்தார்.