2024ஆம் ஆண்டில் நன்னீர் மீன்பிடித்துறையை கட்டியெழுப்புவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். இதன் பிரகாரம் கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர்வேளாண்மை
அபிவிருத்தி அதிகார சபையால் (நக்டா) தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக கடந்த புதன்கிழமை கடற்றொழில் அமைச்சு மற்றும் நக்டா அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், இலங்கையிலுள்ள பிரதான மீன் கருத்தரிப்பு மத்திய நிலையங்களான உடவளவை, தம்புள்ளை, செவனபிட்டிய, இறம்படகல்ல, இங்கினியாகலை உள்ளிட்ட கருத்தரிப்பு மத்திய நிலையங்களின் அபிவிருத்திக்காக 100 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தி அவற்றில் நன்னீர் கருத்தரிப்பு மத்திய நிலையங்களை தொடங்குமாறும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
வட மாகாணத்துக்காக கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபாவுக்கான திட்டங்களை விரைவில் தயாரித்து தமக்கு அனுப்புமாறும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், “நன்னீர் மீன் வளர்ப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து அதனூடாக கிடைக்கும் வருமானத்தை தேசிய பொருளாதாரத்தில் இணைத்துக்கொள்வதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். ஜனாதிபதியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுமென்றார்.
கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு தெரிவித்த அமைச்சர், தான் விரைவில் பிரதான கருத்தரிப்பு மத்திய நிலையங்களுக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.