பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமான எம்.பி. பதவிக்கு, நயன பிரியங்கர வாசலதிலக பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று (12) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பண்டாரவளை, புனித தோமஸ் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த அவர் சமையல்கலை தொடர்பில் பட்டப்படிப்பையும், வர்த்தக முகாமைத்துவம் தொடர்பில் சுவிட்சர்லாந்திலும் பட்டப்படிப்பை நிறைவே செய்துள்ளார். அத்துடன், சமையல்கலைஞராக பல வருடங்கள் அனுபவம் கொண்ட அவர் அவுஸ்திரேலியாவில் முன்னிலை ஹோட்டல் ஒன்றில் மற்றும் இலங்கையில் முன்னிலை ஹோட்டல் ஒன்றிலும் சமையல்கலைஞராக சேவையாற்றியுள்ளார். நயன வாசலதிலக தற்பொழுது முயற்சியாளராக உள்நாட்டு மற்றயும் வெளிநாட்டு பல வர்க்கங்களின் உரிமையாளராவார்.
2015 இல் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலுக்குப் பிரவேசித்த இவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதுளை தேர்தல் மாவட்டத்தில் 31,307 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
2001 இல் இஷானி கெஹெல்பன்னலவை மணம்முடித்த நயன வாசலத்திலக ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
பதுளை மாவட்ட ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி கடந்த செவ்வாய்க்கிழமை (09) தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் கையளித்திருந்தார்.
ஐ.ம.ச. கட்சியிலிருந்து கடந்த தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து 3 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தனர்.
வடிவேல் சுரேஷ், அரவிந்த குமார், சமிந்த விஜேசிறி ஆகியோரே இத்தேர்தலில் ஐ.ம.ச. சார்பில் பதுளையிலிருந்து தெரிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.