சகல பாடசாலை மாணவர்களுக்கும் தேவையான சீருடைகள் பெப்ரவரி 19 க்கு முன்னர் வழங்கப்படுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மொத்தப் பாடசாலை சீருடைத் துணித் தேவையில் 80 வீதம், சீன அரசின் மானியமாகப் பெற முடிந்தது.
இதற்கு முந்தைய ஆண்டில் 50 வீத மானியம் வழங்க ஒப்புக்கொண்ட சீன அரசு, நேரடியாக மானியத்தை 70 வீதமாக உயர்த்தியது. அமைச்சரின் தலையீட்டால் இம்முறையும் 80 வீதமாக மேலும் அதிகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் நேற்று (11) கல்வி அமைச்சின் வளாகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி ஷங்ஹோங், முதல் தொகுதி பாடசாலைச் சீருடைகளை உத்தியோகபூர்வமாக கையளித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மானியத்தில் முதல் தொகையான 5.8 மில்லியன் மீற்றர் சீருடைத் துணி இதுவரை இலங்கையில் கிடைத்துள்ளன. இரண்டாவது தொகுதி பெப்ரவரி 04 ஆம் திகதிக்குள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.