சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண சபையில் தெரிவிப்பு
மில்லியன் கணக்கான மக்களை வாழவைக்கும் நாட்டின் இலவச சுகாதார சேவையின் நம்பிக்கையை சீர்குலைக்கும் பிரசாரங்கள் தவிர்க்கப்படுவது அவசியம் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறு சிறு தவறுகளை வைத்து முழுமையான சுகாதார சேவை தொடர்பிலும் அவநம்பிக்கையை ஏற்படுத்துவது சிறந்ததல்ல என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
மருந்து கொள்வனவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகளால் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஹேஷா விதானகே எம்பி இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதில ளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி மோசடி செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சிஐடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் அதில் தலையிட்டு உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்