– பதுளையிலிருந்து தெரிவான மூவரில் இருவர் ஆளும்கட்சியில்
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் கையளித்துள்ளார்.
இன்றையதினம் (09) பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசறி இது தொடர்பில் அறிவித்தார்.
அதற்கமைய, 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்படவுள்ளது.
தற்போது 43 வயதான சமிந்த விஜேசிறி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் (2020) பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ம.ச. கட்சியிலிருந்து கடந்த தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து 3 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தனர்.
வடிவேல் சுரேஷ், அரவிந்த குமார், சமிந்த விஜேசிறி ஆகியோரே இத்தேர்தலில் ஐ.ம.ச. சார்பில் பதுளையிலிருந்து தெரிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.