அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுவதை போன்ற பெரும் புண்ணியம் ஏதுமில்லை. அதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி. அதுதான் “ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமன்” என்ற கொள்கையாகும். இந்த கொள்கையை, தனது சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரண காணியை, வத்தளை வாழ் தமிழ் பிள்ளைகளின் பாடசாலை கனவுக்காக வழங்கி, தன் வாழ்வில் செய்து காட்டி நிரூபித்த மாமனிதர் அமரர் மாணிக்கவாசகம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
வத்தளை அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயத்தில் நடைபெற்ற கல்லூரி ஸ்தாபகர் அமரர் மாணிக்கவாசகம் சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே மனோ கணேசன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, ஒவ்வொரு தேர்தலிலும் “உங்களுக்கு தமிழ் பாடசாலை கட்டி தருவேன்”, என்று சொல்லி வாக்குகளை வாங்கி இவர்கள் சுருட்டுவதும், அப்பாவி தமிழர்கள் ஏமாறுவதும், தொடர்ந்து நிகழ்ந்து வந்தது.
இதற்கிடையில் இங்கே வந்தவேளையில் இன்னொரு காணியில் சில எடுபிடி தமிழர்கள் இதே மோசடி அரசியல்வாதிகளை அழைத்து சென்று பலமுறை அடிக்கல்கள் நாட்டி ஏமாற்றியதும் நடந்து வந்தது.
தமிழ் பாடசாலை அமைக்க காணியை அமரர் மாணிக்கவாசகம் மனமுவந்து வழங்குவதை “சரி, சரி தாருங்கள்” என வாங்கிக்கொண்டு, கடைசியில் பெரும்பான்மை இன பாடசாலைக்கு அந்த காணியை, பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் திருப்பி விடுவார்கள்.
கண்டியில் இப்படித்தான் ஒரு தமிழ் தனவந்தர் ஒரு காலத்தில் தமிழ் பாடசாலைக்கு வழங்கிய காணியில் இன்று சிங்கள பாடசாலை இருக்கிறது. காணியை வழங்கிய அந்த தமிழ் தனவந்தரின் பெயர்கூட, பாடசாலை காணியின் சரித்திரம் கூட இப்பொழுது அங்கே எவருக்கும் தெரியாது.
ஆகவே, நாம் எச்சரிகையுடன் செயற்பட வேண்டும் என தீர்மானித்தேன். சிங்கள பிள்ளைகளுக்கும் பாடசாலை தேவைதான். ஆனால், இங்கே சிங்கள பாடசாலைகள் அநேகம் உள்ளன.
எமது பிரச்சினையே, வத்தளையில் முழுமையான தமிழ் பாடசாலை இல்லவே இல்லை என்பதுதானே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்பதையும் நாம் தீர்மானித்தோம்.
அதன்பிறகு நான் ஒரு அமைச்சரவை அமைச்சராக, இது தொடர்பில் ஒரு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து, இந்த காணி வழங்கலை ஒரு அமைச்சரவை நடவடிக்கையாக மாற்றினேன்.
பாடசாலையின் பெயர், மறைந்த தனது மகனின் பெயரில் அமைய வேண்டுமென, பாசமுள்ள தந்தை அமரர் மாணிக்கவாசகம் விரும்பினார். அந்த பெயருடன் “இந்து” என்ற பெயரையும் சேர்க்க வேண்டும் என நான் விரும்பி, அவரின் அனுமதியை பெற்று, இந்த பாடசாலையில் பெயரை “அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம்” என முடிவு செய்தோம்.
அத்துடன் நான் நிறுத்தவில்லை. “பாடசாலையின் ஸ்தாபகர் தினம், பாடசாலையின் ஸ்தாபகர்களாக அருண் பிரசாந் மாணிக்கவாசகம் அறக்கட்டளை” என்ற விடயங்கள் எனது அமைச்சரவை பத்திரத்தில் இடம் பெற்றன. அது மட்டும் அல்லாமல், இந்த பாடசாலை, தமிழ் இந்து பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உருவாக்கப்படுகிறது.
இந்த நோக்கம் ஒருபோதும் மாற்றப்படக்கூடாது. அப்படி அது மாறுமானால், இந்த காணி, மாணிக்கவாசகம் குடும்பத்துக்கு மீள கையளிக்கப்பட வேண்டும் என்ற பிரதான நிபந்தனையையும் நான் எனது அமைச்சரவை பத்திரத்தில் இடம்பெற செய்தேன் என்றார்.