மத்திய ஜப்பானை தாக்கிய பூகம்பம் இடம்பெற்று ஐந்து நாட்களின் பின் 90 வயதுகளில் இருக்கும் பெண் ஒருவர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சுசு நகரில் இடிந்த இரண்டு மாடி கட்டடம் ஒன்றுக்குள் இருந்தே அவரை மீட்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி முதலாம் திகதி 7.5 ரிச்டர் அளவில் தாக்கிய பூகம்பம் நோட்டோ தீபகற்பத்தில் உள்ள சிறு நகரங்களில் கடும் சேதங்களை ஏற்படுத்தியது. 120க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதோடு மேலும் 200 பேர் வரை காணாமல்போயுள்ளனர். இடிபாடுகளுக்குள் இரு பெண்கள் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சுசு நகருக்கு 100 மீட்பாளர்கள் அனுப்பப்பட்டதாக ‘யொமியுரி சிம்புன்’ பத்திரிகை குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்தே அந்த மூதாட்டி மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தில் இருந்து 40 வயதுகளில் இருக்கும் பெண் ஒருவரையும் மீட்பாளர்கள் காப்பாற்றியுள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த முதிய பெண்மணி, மருத்துவர்களின் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளிப்பதாக என்.எச்.கே ஒலிபரப்புக் கழகம் தெரிவித்தது.