பங்களாதேஷில் பிரதமர் ஷெய்க் ஹசீனா தனது நான்காவது தவணைக்கான பதவிக் காலத்தை உறுதி செய்யும் வகையிலான, அவரால் ‘பயங்கரவாத அமைப்பு’ என்று அறிவிக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்த பொதுத் தேர்தலில் நேற்று (07) மக்கள் வாக்களித்தனர்.
எனினும் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகளில் தலைநகர் டாக்காவின் புறநகர் உட்பட குறைந்தது 14 வாக்குச் சாவடிகள் தீ வைக்கப்பட்டதோடு ரயில் நிலையம் ஒன்று தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹசீனாவின் பதவிக் காலத்தில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை குறைப்பு ஆகியவை இடம்பெற்றபோதும் மனித உரிமை மீறல்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடுமையாக ஒடுக்கப்படுவது தொடர்பில் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கு போட்டியாக எந்த பிரதான எதிர்க்கட்சியும் இருக்கவில்லை. இதனால் பாராளுமன்றத்தில் ஒரு கட்சி ஆட்சி அமைவதை தவிர்ப்பதற்கு ஆளும் கட்சி சில இடங்களில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாக்குப் பதிவிலும் மந்த நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் டாக்காவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் முதல் 30 நிமிடங்களில் மூவர் மாத்திரமே தமது வாக்கை பதிவு செய்திருந்ததாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நேற்று பின்னேரம் 5 மணியுடன் வாக்குப் பதிவுகள் முடிவடைந்த நிலையில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.