இலங்கை மகளிர் மற்றும் கனிஷ்ட கிரிக்கெட் தேர்வுக் குழுக்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் நியமிக்கப்பட்டுள்ளன.
வயது மட்ட (கனிஷ்ட) தேர்வுக் குழுவுக்கு வினோதன் ஜோன் தலைவராக நிமிக்கப்பட்டிருப்பதோடு துமிந்த விக்ரமசிங்க, ஹசன்த பெர்னாண்டோ, வருன வராகொட மற்றும் ஷேன் பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மகளிர் தேர்வுக் குழுவில் ஹேமன்த தேவப்ரியவின் தலைமை பொறுப்பு தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வுக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனைகளான ரசாஞ்சலி அல்விஸ், ஸ்ரீபாலி வீரக்கொடி, நில்மினி குணரத்ன மற்றும் ஜயமாலி இன்திகா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை மகளிர் அணியை தேர்வு செய்வது இந்த புதிய தேர்வுக் குழுவின் முதல் பொறுப்பாக அமையவுள்ளது.
ஏற்கனவே இலங்கை ஆடவர் கிரிக்கெட் தேர்வுக் குழுவில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டு முன்னாள் வீரர் உபுல் தரங்க தலைமையில் புதிய தேர்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.