Friday, March 29, 2024
Home » கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பிரிவுகளில் சின்னமுத்து தடுப்பூசிகள்

கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பிரிவுகளில் சின்னமுத்து தடுப்பூசிகள்

by damith
January 8, 2024 9:54 am 0 comment

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளிலுள்ள 67 மத்திய நிலையங்களில், சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சக்கீலா இஸ்ஸதீன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு, 06 தொடக்கம் 09 மாத குழந்தைகளுக்கு மேலதிகமாக சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய கடந்த சனிக்கிழமை (06) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள சுகாதார வைத்தியதிகாரி காரியாலயங்கள் மற்றும் இதற்கென தெரிவு செய்யப்பட்ட மையங்களில் சின்னமுத்து தடுப்பூசி ஏற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளில் இதுவரை, சின்னமுத்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 15 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. சில பிரதேசங்களில் நடமாடும் சேவை ஊடாகவும், தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. வீடு வீடாகச் சென்று சுகாதார அதிகாரிகள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றினர்.

நாட்டில் தற்போது சின்னமுத்து மற்றும் ஜெர்மன் சின்னமுத்து நோய் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கொழும்பை அண்டிய பகுதிகளில் தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கு, இவ்வாறான நோய் பரவல் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்தே, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் சுகாதார வைத்தியதிகாரிகள் தலைமையில், பொது சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள், பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல மருத்துவ மாது உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

(ஒலுவில் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT