நாட்டில் கடந்த சில தினங்களாக சந்தேகத்திற்கிடமான வகையில் இடம் பெற்றுள்ள ஏழு மரணங்கள் தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திற்கு கையளித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஹோமாகம பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்றுடன் தொடர்பு பட்டவரின் சகாக்கள் என குறிப்பிடப்படும் இளைஞர் ஒருவரும் யுவதியும் உடலில் நஞ்சு கலந்ததால் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிசார் மேற்படி 21 வயது யுவதியும் 34 வயதுடைய நபரும் உடலில் நஞ்சு கலந்துள்ளதாலேயே மரணமடைந்துள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேற்படி யுவதியின் சடலம் யக்கல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் அம்பலாங்கொடைபிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 34 வயது நபரின் சடலம் அவர் தங்கியிருந்த மகரகம பிரதேசத்தில் உள்ள விடுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் சமய போதனைகளில் ஈடுபட்டிருந்த ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபர், தமது உடலில் நஞ்சேற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனையடுத்து அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இத்தகைய நிலையில் மரணமடைந்த ருவன் பிரசன்ன குணரத்னவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த இளைஞர் மற்றும் யுவதியும் நேற்றைய தினம் மரணமடைந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளனர். ஒரே விதமான விஷம் உடலில் கலந்ததால் இவர்கள் அனைவருமே மரணமடைந்துள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்