கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விமான நிலைய ஒருங்கிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகிக்கும் தலைவர்கள் 28 பேரின் சேவையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்
இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று நண்பகல் 12 மணிமுதல் அவர்களின் சேவையை இடைநிறுத்தி கட்டாய விடுமுறை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அத்துல கல்கெடிய தெரிவித்துள்ளார்.
மேற்படி தொழிற்சங்கம் கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட இலங்கையில் இயங்கும் ஏனைய அனைத்து சர்வதேச விமான நிலையங்கள், பீதுறுதாலகால ரேடார் மத்திய நிலைய ஊழியர்களையும் இணைத்துக் கொண்டுள்ளதாக விமான நிலைய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் தம்மிக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் விமான பயண தொடர்புகளைக் கொண்டுள்ள அனைத்து விமான சேவைகளையும் சிக்கலுக்குள்ளாக்கி அதனை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் மூலம் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட கட்டாய விடுமுறை கடிதத்தில் விமான நிலைய தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்