Thursday, March 28, 2024
Home » நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய 40 வர்த்தகர்களுக்கு அபராதம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய 40 வர்த்தகர்களுக்கு அபராதம்

டிசம்பர் மாதம் மட்டும் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் அறவீடு

by Gayan Abeykoon
January 4, 2024 7:01 am 0 comment

அம்பாறை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 40 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் 01 இலட்சத்தி 16 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம். சாலிய பண்டார தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, தெஹியத்தக்கண்டிய ஆகிய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 115 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இதில் 40 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், இவ் வர்த்தகர்களுக்கு 01 இலட்சத்தி 16 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் செய்த முறைப்பாட்டையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, நுகர்வோர் நலன் கருதி வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருட்களை காட்சிப்படுத்தியமை, காலவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றுதல், மின் உபகரணங்களுக்கான கட்டுறுதிக் காலத்தை வழங்காமை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கெதிராகவும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததாக அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக பொது மக்கள் 1977ம் இலக்கத்திற்கு அல்லது மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் 0632222355 எனும் இலக்க தொலைபேசி இலக்கத்திற்கும் தகவல்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஒலுவில் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT