சிறு போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் இரசாயன உரத்துக்கான ‘வற்’ வரியை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக, விவசாய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போதைய பெரும்
போகத்துக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள சகல இரசாயன உர வகைகளும் பழைய விலைக்கே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், தெரிவித்தார்.
இந்த வகையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் யூரியா, எம். ஓ. பி., டி எஸ். பி. ஆகிய இரசாயன உரங்களுக்காக வற் வரியை இணைத்து கொண்டு உர வகைகளின் விலையை அதிகரிப்பதற்கான எந்த அவசியமும் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு உர வகைகளை விற்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர், அவ்வாறான உரத்தை கொள்வனவு செய்யும் விவசாயிகள் அந்த வர்த்தக நிறுவனத்தின் பற்றுச்சீட்டை விவசாய அமைச்சுக்கு அனுப்பினால், அதற்கிணங்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)