பிறந்திருக்கும் புத்தாண்டு (2024) தேர்தல் ஆண்டாகவுள்ளதால் தேர்தலை இலக்காகக் கொண்டு இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாதென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு புதுவருடத்தில் அலுவலக கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (01) நீதி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2024, தேர்தல் ஆண்டு என்பதை நாம் அறிவோம்.தேர்தல் ஆதாயங்களுக்காக
மக்கள் மத்தியில் பிரிவினை,பாகுபாடு மற்றும் குழப்பங்களை ஏற்படுத்த அனுமதிக்க கூடாது.
புது வருடத்தில் உறுதிப்பிரமாணம் மேற்கொண்டாலும்,அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் மத்தியல் நல்லெண்ணம் இல்லை.முன்மாதிரி அமைச்சாக நீதி அமைச்சின் செயற்பாடுகளை உறுதிப்படுத்தி இருக்கிறோம்.உலகில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகளை பார்க்கும்போது இந்தளவு குறுகிய காலத்துக்குள் ஸ்திரநிலைக்கு வந்த நாடுகள் இல்லை.
இவ்விடயத்தில் இலங்கை மீண்டெழுந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகிறது.
2023 இல், ஜீ.எஸ்பி பிளஸ் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையை பெற்றுக்கொள்ளத் தேவையான முக்கியமான அளவுகோல்களை பூரணப்படுத்தும் பொறுப்பை நீதி அமைச்சே மேற்கொண்டது.
மேலும் 2024ஆம் வருடத்துக்குள் 60 புதிய சட்ட மூலங்களை அனுமதித்துக்கொள்ள தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியலமைப்பு புரட்சி 21ஆம் அரசியலமைப்பு திருத்தமாகும். ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல புதிய சட்டங்களை அனுமதித்துக்கொண்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம்.