கொழும்பு, மொறட்டுவ பல்கலைக்கழகங்களின் கணினிப் பிரிவுகளின் ஆலோசனைகள் பெறப்படுகின்றன
மருத்துவமனைகளுக்கு மருந்துப் பொருட்களைப் பெறுவதற்கான செயல்முறையை இனி வெளிப்படையானதாக மாற்றும் நோக்கத்துடன், கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கத் தேவையான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண நேற்று தெரிவித்தார்.
இதற்காக கொழும்பு மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகங்களின் கணினிப் பிரிவுகளின் ஆலோசனைகள் பெறப்படுவதாகவும் அதன்படி, எதிர்காலத்தில் இக்கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவரும் எந்த மோசடிகளிலும் ஈடுபடமுடியாதவாறு, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பதிரண, நாட்டு மக்களுக்கு இலவச சுகாதார சேவையின் கீழ், உயர் தரத்திலான மருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கொவிட் 19 நெருக்கடிக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது, நாட்டின் நிதி நிலை சீராக முன்னேறி வருவதால், அத்தியாவசிய மருந்துகளை பெற, அரசின் கொள்முதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்கு மருந்துப் பொருட்களைப் பெறுவதற்கான செயல்முறையை வெளிப்படையானதாக மாற்றும் நோக்கத்துடன், கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கத் தேவையான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக கொழும்பு மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களின் கணனிப் பிரிவுகளின் ஆலோசனைகள் பெறப்படுகின்றன. அதன்படி, எதிர்காலத்தில் இக்கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
மேலும் , இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஔடதக் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தர, ஆய்வு கூடத்தை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் கொள்திறன், மனித வளம் மற்றும் அதன் கட்டமைப்பு மாற்றங்களை இந்த வருடத்தில் மேற்கொள்ள முடியும். மேலும், இந்நாட்டுக்குத் தேவையான 850 வகையான அத்தியாவசிய மருந்து வகைகள் இனங்காணப்பட்டுள்ளன. அந்த மருந்துகளில் மக்களின் உயிர் காக்கும் அனைத்து மருந்துகளும் எங்களிடம் உள்ளன. கண்களுக்குத் தேவையான லென்ஸ்கள், இதய நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை உபகரணங்கள் (ஸ்டென்ஸ்), எலும்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.