இலங்கை வாசகர்களுக்கு ஆங்கிலத்தில் தகவல்களை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் எமது சகோதர பத்திரிகையான டெய்லி நியூஸ் நாளிதழின் 106வது ஆண்டு நிறைவு தினம் இன்று (03) கொண்டாடப்படுகிறது.
இலங்கையின் லேக் ஹவுஸ் நிறுவனம் டெய்லி நியூஸ் என்ற ஆங்கில நாளிதழை, 1918ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03ஆம் திகதி வெளியிட ஆரம்பித்தது. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர்.விஜயவர்தன இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இந்த செய்தித்தாளை வெளியிட முயற்சி செய்து முதலில் ‘சிலோன் டெய்லி நியூஸ்’ என்ற பெயரில் வெளியிட்டார்.
முதல் பதிப்பு வெளியிடப்பட்டபோது, பாராட்டு விழாவில், சேர். பொன். அருணாசலம் , “இந்த நாளிதழ் பிறந்த தருணம் பாக்கியமானது. மேலும் தேசத்தின் மனசாட்சியை எழுப்பி புதிய சக்திகள் செயல்படும் நேரத்தில் இந்த புதிய செய்தித்தாள் வெளியிடப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார் . அதன் தொடக்கத்திலிருந்தே, ‘சிலோன் டெய்லி நியூஸ்’ செய்தித்தாள் இலங்கையில் மக்களின் கருத்தை வடிவமைக்கும் சக்தியாக மாறியது. இதழியலாளர் ஈ. எஃப். மார்ட்டினஸ், டெய்லி நியூஸின் ஆரம்ப ஆசிரியராக இருந்தார். புதிதாக மக்கள் மயமாக்கப்பட்ட ‘டெய்லி நியூஸ்’, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து விடுபட போராடும் குழுக்களின் கருத்து வெளிப்பாடாகக் காணப்பட்டது. இலங்கையின் ஏனைய பத்திரிகைகள் பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியடைந்து வந்ததால் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையால் வேகமாக பிரபல்யம் அடைய முடிந்தது.
அதன் தொடக்க காலத்திலிருந்தே, ‘டெய்லி நியூஸ்’ நாளிதழ் நடுநிலையான அணுகுமுறையைப் பின்பற்றியது.