ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதாக பலர் விருப்புடன் இருந்தாலும், தற்போதுள்ள செயற்பாட்டு அரசியலில் இதற்குத் தகுதியானவர் ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு எவரும் இல்லை.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும். அதற்காக அந்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாதெனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு வங்குரோத்து அடைந்தபோது நாட்டை பொறுப்பெற்க யாரும் முன்வரவில்லை. பல்வேறு காரணங்களை தெரிவித்து, பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதிலிருந்து
பலரும் நழுவிச் சென்றனர்.இப்போது இவர்கள்,ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாக தெரிவித்து வருகின்றனர்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு சில கஷ்டமான தீர்மானங்களை தைரியமாக முன்னெடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.இவர்தான், நாட்டை வங்குராேத்து நிலையிலிருந்து மீட்டு, மக்களை இயல்பு நிலைக்குத் திருப்பியவர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் அவருக்குள்ள நீண்டகால தொடர்புகளாலே இந் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது.
இவ்வாறான நிலையில் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தற்போதுள்ள அரசியல்வாதிகளில் ரணில் விக்கிரமசிங்கவை தவிர தகுதியான வேறு யார் இருக்கிறார் என கேட்கிறோம்.