உரிமையாளருக்கு தெரியாத வகையில் அவரது அடையாள அட்டை இலக்கத்தில், வேறு நபர்களுக்கு 1191 SIM கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, SIM கார்டுகளை விநியோகித்த கையடக்கத் தொலைபேசி நிறுவனத்துக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
நீர்கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஜே. எம். காமினி என்ற 75 வயது சாரதி, தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்த போதே, கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதான மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எல்ல பொலிஸ் நிலையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்புக்கு இணங்க, அங்கு சென்றுள்ள மேற்படி மனுதாரர் அவரது அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ள சிம் கார்ட் ஊடான சட்ட விரோத செயற்பாட்டை அறிய முடிந்தது. இவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றத்தில் இதுபற்றி விளக்கமளித்தார்.
இவ் விசாரணைகளின் போது மேற்படி நிறுவனத்தின் தொலைபேசி அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.இதையடுத்து மேற்படி நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் பெருமளவு சிம் கார்டுகள் வேறு நபர்களுக்கு வழங்கியுள்ளமை தெரிய வந்ததாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி கட்டளைகளுக்கு இணங்க ஒரு நபரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் கீழ், 05 சிம் கார்டுகளையே விநியோகிக்க முடியும். உரிமையாளருக்கு தெரியாமல் இவ்வாறு பெருமளவு சிம்கார்டுகளை விநியோகித்துள்ளமை குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி வழங்கிய தெளிவுபடுத்தலை ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம், சிம் கார்டுகளை உபயோகிப்பதை தடை செய்து தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)