தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதுக்கும் சீனா உரிமை கொண்டாட முடியாது. அதனை உலகில் எந்தவொரு நாடும் ஆதரிக்கவில்லை என்று பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு அமைச்சர் கில்பேர்ட்டோ தியோடோரோ தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ், தென் சீனக் கடற்பிராந்தியம் தொடர்பில் பிரச்சினைகளை உருவாக்கி பதற்றத்தை தூண்டுவதாக சீனா தெரிவித்துள்ளமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வருடமொன்றுக்கு 3 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட பெறுமதியான பொருட்களை கொண்ட வர்த்தகக் கப்பல்கள் பயன்படுத்தும் இக்கடல் பிராந்தியத்தை சீனா முழுமையாக உரிமை கொண்டாடுகிறது.
பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரும் பகுதிகளும் இங்குள்ளன.
பிலிப்பைன்ஸின் பிரத்தியேக பொருளாதார பிராந்தியத்திலும் அடங்கியுள்ள தென் சீனக் கடல் பிராந்தியத்தை மேற்கு பிலிப்பைன்ஸ் கடற்பகுதி என அந்நாடு குறிப்பிடுகிறது. அதனால் மேற்கு பிலிப்பைன்ஸ் கடற்பகுதியின் கூட்டு பொறுப்புக்கள் தொடர்பில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்திலுள்ள தமது பங்காளர்களுடன் கலந்துரையாடவிருப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கூறியுள்ளார்.