மடுல்சீமை ஊவகெல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 21 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்சமயம் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு ஊவகெலை தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் களத்திற்கு நேரடியாக விஜயம் செய்து கலந்துரையாடினார்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர குடியிருப்பு அமைப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடனும் பெருந்தொட்ட நிர்வாகத்தினருடனும் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
மேலும் அவர்களுக்குரிய நிவாரண உதவிகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு உலர் உணவுப் பொருட்களையும் கையளித்தார்.
தொடர்ந்தும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் நேற்றைய தினம் இடம்பெற்றது.