அம்பாறை மாவட்டத்தில் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை பெய்துவரும் நிலையில், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் ஏதாவது அனர்த்தங்கள் ஏற்படுமாக இருந்தால், முன்னாயத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம தெரிவித்தார்.
இது தொடர்பாக மாவட்டத்திலுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், இராணுவ கட்டளைத் தளபதி, உள்ளுராட்சி உதவி ஆணையாளர், வீதி அபிவிருத்தி சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளை (04) க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகின்றது. இக்காலத்தில் அடிக்கடி தாழமுக்கம் உருவாகி பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடிய பகுதியாகையால் பரீட்சை நிலையத்துக்கான போக்குவரத்துக்கு பரீட்சை நிலையம் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்படின் உதவுவதற்கு தயாராக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்காக அனர்த்த தயார்படுத்தல் திட்டம் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒலுவில் விசேட நிருபர்