வடக்கிற்கு 4 நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயம் நாளை மறுதினம் (04) ஆரம்பமாவதுடன், மாலை 3.00 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறுவதற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் ஒன்று நேற்று (01) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ,திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பல்வேறு திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் சகல திணைக்களத் தலைவர்களாலும் மாவட்டத்தின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் உள்ளடங்களாக தயாரிக்கப்பட்ட விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டன. மேலும் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.
முல்லைத்தீவு குறூப் நிருபர்