மக்களின் சிந்தனைகளில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தி செழிப்பான எதிர்காலத்தை உருவாக்கும் ஆண்டாக பிறந்திருக்கும் புத்தாண்டு அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவரது செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அரசியல் அபிலாசைகளை பெற்று சகல வளங்களையும் கொண்டவர்கர்களாக இந்நாட்டிலே வாழ்கின்ற சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையோடு எத்தனையோ வருடங்களை எமது மக்கள் கடத்திவிட்டனர்.
இருந்த போதிலும், அந்த நம்பிக்கைகள் இதுவரை பூரணமாக்கப்படவில்லை. இந்த ஆதங்கம் எனக்கும் இருக்கிறது.
எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் பூரணமாகாமல் இருப்பதற்கு பிரதான காரணம், எமது தரப்பில் இருக்கின்ற பலவீனங்களும் குறுகிய நோக்கங்களை கொண்ட சுயநல சிந்தனைகளுமே.
எமது மக்களின் அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேறுமாக இருந்தால், தங்களுடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று அஞ்சுகின்ற சுயநல தமிழ் அரசியல் தரப்புக்கள், தென்னிலங்கை தொடர்பான நம்பிக்கையீனங்களை அதிகரிப்பதிலும், உருவாகின்ற பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அணுகாமல் வீரியமாக்கும் வகையில் அணுகுவதையும் தங்களின் அரசியல் கொள்கையாக வரித்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் எமது அணுகுமுறை என்பது வித்தியாசமானது. எமக்கு கிடைக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையும் வளங்களையும் பயன்படுத்தி எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பது அவசியம். அபிவிருத்தி திட்டங்களை முடிந்தளவு முன்னெடுப்பதன் மூலம் எமது மக்களின் வாழ்வியலைப் பாதுகாக்கின்ற சமகாலத்தில், இருப்பதை பாதுகாத்துக் கொண்டு அரசியல் அபிலாசைகளை முன்நோக்கி நகர்த்துகின்ற தந்திரோபாய நகர்வுகளையும் முன்னெடுப்பதே எமது திட்டங்களில் பிரதானமானவை.பிறந்துள்ள புத்தாண்டு இத்திட்டங்கள் வெற்றியளிக்கவும் நிறைவேறவும் வழி ஏற்படுத்தட்டும்.