சிம்பாப்வேயுக்கு எதிரான எதிர்வரும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு இலங்கை பயிற்சி குழாத்தில் முன்னாள் வீரர்களான உபுல் சந்தன மற்றும் திலின கண்டம்பி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணியின் களத்தடுப்பு திறனை அதிகரிப்பதற்காக களத்தடுப்பு பயிற்சியாளர் அன்டன் ருக்ஸுடன் இணைந்து சந்தன பணியாற்றவுள்ளார். உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் களத்தடுப்பு மோசமாக இருந்ததோடு, அந்தத் தொடரின் ஒன்பது போட்டிகளில் இலங்கை அணி 16 பிடியெடுப்புகளை தவறவிட்டது போட்டி முடிவுகளிலும் தாக்கத்தை செலுத்தியது.
இந்நிலையில் இலங்கை அணியின் திறமைமிக்க முன்னாள் களத்தடுப்பு வீரரான உபுல் சந்தனவை களத்தடுப்பு பயிற்சியாளரிடம் அண்மையில் ஆலோசகராக நியமிக்கப்பட்ட சனத் ஜயசூரியவே பரிந்துரைத்துள்ளார்.
அதேபோன்று நவீட் நவாஸுக்கு பதில் துடுப்பாட்ட பயிற்சியாளராக கண்டம்பி பொறுப்பேற்றுள்ளார். நவாஸ் தொடர்ந்தும் உதவிப் பயிற்சியாளராக செயற்படவுள்ளார். அதேநேரம் பெரிதும் அறியப்பட்ட டில்ஷான் பொன்சேகா பயிற்றுவிப்பாளராக அணியுடன் இணையவுள்ளார்.
இலங்கை வரும் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்காக சிம்பாப்வே அணி ஜனவரி 3ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
உபுல் சந்தன இலங்கை அணிக்காக 16 டெஸ்ட் மற்றும் 146 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருப்பதோடு கண்டம்பி 39 ஒருநாள் மற்றும் 5 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.