நாட்டின் கல்வித்துறை மறுமலர்ச்சிக்கு எமது சயீடா நிறுவனம் கடந்த வருடம் மேற்கொண்ட பணிகளைப்போன்று இன்று மலர்ந்துள்ள 2024ஆம் ஆண்டிலும் பல திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அமைப்பின் இலங்கை இணைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌஸர் பௌஸி தெரிவித்தார்.
சயீடா நிறுவனத்தினால் கடந்த வருடம் (2023) பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பு நேற்று (31) கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்; எமது சயீடா நிறுவனம் இந்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூகசேவை அமைப்பாகும்.
நாட்டில் வாழுகின்ற சகல மக்களுக்கும் சிறந்த கல்வியை வழங்க வேண்டுமென்ற தூரநோக்கோடு நாம் செயலாற்றி வருகின்றோம். எமக்கு தேவை நாட்டிற்கு சிறந்த மாணவர் சமூகமொன்றை உருவாக்கி ஒவ்வொரு வீட்டிற்கும் சிறந்த கல்விமான்களை உருவாக்க வேண்டும் என்பதே.
இதனை மையப்படுத்தியே எமது சயீடா நிறுவனம் செயலாற்றி வருகிறது.
கடந்த வருடம் எமது அமைப்பினால் தென் மாகாணத்தின் காலி, மாத்தறை பகுதி பாடசாலைகளுக்கு நிறைய சேவைகளை முன்னெடுத்தோம். இதில் அரசாங்கத்தின் அமைச்சர்களும் கலந்து எமக்கு ஊக்கமளித்தனர்.
அதேபோல், மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திலுள்ள பேருவளை, தர்கா நகர் போன்ற பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கும் கட்டடங்கள் உட்பட சேவைகளையும் வழங்கியுள்ளோம்.
அதேபோன்று, டிசம்பர் மாதத்திலும் கொழும்பிலுள்ள சுமார் 10 பாடசாலைகளில் புதிய கட்டடத்திற்காக அடிக்கல் நட்டி வைத்தோம். அதேபோல் தொடர்ந்தும் கல்வியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மலர்ந்துள்ள புத்தாண்டில் எமது சயீடா நிறுவனம் திடசங்கற்பம்பூண்டுள்ளதாகவும் இணைப்பாளர் நௌஸர் பௌஸி மேலும் தெரிவித்தார்.
(அஜ்வாத் பா)