Thursday, March 28, 2024
Home » தீவிர தமிழ்ப்பற்றும், பிறருக்கு உதவும் உள்ளமும் கொண்டவர் விஜயகாந்த்

தீவிர தமிழ்ப்பற்றும், பிறருக்கு உதவும் உள்ளமும் கொண்டவர் விஜயகாந்த்

by sachintha
December 30, 2023 6:19 am 0 comment

நலிவடைந்த மக்களுக்கு அவர் வழங்கிய உதவிகள் ஏராளம்!

தமிழ்நாடு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் 25 ஆம் திகதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்கின்ற விஜயகாந்த். இவரின் மனைவி பிரேமலதா. இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

சிறு வயது முதலே சினிமாமீது இருந்த பிடிப்பின் காரணமாக, பல பாடசாலைகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை காட்சிகாட்சியாக தன் நண்பர்களிடம் விபரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு கீரைத்துரையில் இருக்கும் தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார்.

தனது நண்பர்களின் உந்துதலின் பேரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சென்னைக்கு வந்தார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979 ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார்.

சட்டம் ஒரு இருட்டறை, தூரத்து இடிமுழக்கம், அம்மன்கோவில் கிழக்காலே, உழவன் மகன், சிவப்பு மல்லி என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார். 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984 இல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் வைப்பிலிட்டார். 2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து ‘நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கின்ற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார்.

1965 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனது சிறு வயதிலேயே விஜயகாந்த் பங்கேற்றதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, 1984 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார். பின், 1986-ம் ஆண்டு அதே காரணங்களுக்காக சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த். அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

1989-களில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிக்கும் இலங்கையர்களுக்கு உதவிபுரிந்தும் வந்தார். “ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டைத் தவிர்த்தார்.

2002 இல் `ராஜ்ஜியம்’ படத்திலிருந்து அரசியல் குறித்த வசனங்கள் அவரின் படங்களில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கின. அப்படி, விஜயகாந்தின் இந்த அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொண்டதாலேயே ஆளும் அரசியல் கட்சிகள் அவருக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்துவந்தன. அதேவேளையில், அரசியலுக்கு வர, சரியான களத்துக்காக, காரணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார் விஜயகாந்த். கள்ளக்குறிச்சியில் தன் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் திருமணவிழாவில் விஜயகாந்த் வருகையை முன்னிட்டு கட்டப்பட்ட மன்றக் கொடிக்கம்பங்களை பா.ம.க-வினர் வெட்டிச் சாய்த்தனர்.

அதைத் தொடர்ந்து, நடந்த திருமண நிகழ்வில் ராமதாஸையும், அவரின் மகன் அன்புமணி ராமதாஸையும் விஜயகாந்த் விமர்சிக்க, பதிலுக்கு விஜயகாந்தை ராமதாஸ் விமர்சிக்க, ராமதாஸ் – விஜயகாந்த் மோதல், பா.ம.க தொண்டர்கள் – விஜயகாந்த் ரசிகர்கள் என விரிவடையத் தொடங்கியது. பல இடங்களில் விஜயகாந்தின் மன்றக்கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட, மன்ற நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். விஜயகாந்த் நடித்த `கஜேந்திரா’ படத்துக்கு ராமதாஸால் சிக்கல் எழுந்தது. விஜயகாந்தைக் கடுமையாக விமர்சித்து வட மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

கண்கள் சிவக்க வெகுண்டெழுந்தார் நடிகர் விஜயகாந்த். ஊர் ஊராகச் சென்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க ஆரம்பித்தார். சென்ற இடங்களிலெல்லாம் விஜயகாந்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. விஜயகாந்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், 2005-ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் திகதி மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தி, ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.

கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையாத நிலையில், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டி என்று கூறி 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியவர், பா.ம.க-வின் கோட்டையான விருத்தாசலம் தொகுதியில் அமோக வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்கள் தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தே.மு.தி.க-வுக்கு 8.4 சதவிகித வாக்குகளைப் பெற்றுத்தந்தனர். அதைத் தொடர்ந்து, 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்து நின்று, தோல்வியைத் தழுவினாலும் 10 சதவிகித வாக்குகளை தே.மு.தி.க பெற்ற

தனித்தே போட்டியிட்டுவந்த விஜயகாந்த், முதன்முறையாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த் முதன்முறையாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏற்பட்டு, அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி முறிந்தது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று தேர்தலைச் சந்தித்த தே.மு.தி.க., போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., வி.சி.க., த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம்வகித்த மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவில் ம.ந.கூட்டணி உட்பட தே.மு.தி.க-வும் போட்டியிட்ட 104 தொகுதியிலும் படுதோல்வியடைந்தது. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயாகாந்த் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு கட்டுப்பணம் இழந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்று நான்கு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட தே.மு.தி.க அனைத்திலும் படுதோல்வியடைந்தது.

நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் சென்றனர். போதாக்குறைக்கு விஜயகாந்தின் உடல்நிலையும் மோசமடைந்தது.

விஜயகாந்த், தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே 1989-ல் ஈரோட்டில் இலவச மருத்துவமனை, சென்னை சாலிகிராமத்தில் இலவச மருத்துவமனை, ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு இலட்சக்கணக்கில் கல்வி நிதியுதவி, எம்.ஜி.ஆர் காது கேளாதோர்-வாய் பேசாதோர் பள்ளி, லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை, தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இலவச கணினிப் பயிற்சி மையம், இலவச திருமண மண்டபங்கள், ஏராளமான ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணம், கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி எனக் கலக்கியவர். குஜராத் பூகம்பம், கார்கில் போர், சுனாமி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து எனப் பல சோக நிகழ்வுகளுக்குத் தன் சொந்தச் செலவில் நிவாரணங்களை கொடுத்து உதவிவந்தார். அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் தானே புயல், ஆந்திரா புயல், ஒடிசா வெள்ளம் எனப் பாரபட்சமின்றி முதல் ஆளாக முன்வந்து நிவாரணங்கள் வழங்கினார். மேலும், பல்வேறு தமிழர் சார்ந்த உரிமைப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தினார். இது போன்று எண்ணிலடங்கா சாதனைகளுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த்.

தனிப்பட்ட முறையில் அனைவராலும் நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்தார் விஜயகாந்த்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT